கேடி மனம் ( #நேரம் தவறாமை )

நேரம் தவறாமை
பெயரிலேயே ஆமை இருக்கிறதே.பிறகெப்படி வேகம் எதிர்பார்ப்பது.முதலில் பெயர் மாற்ற வேண்டும். நேரம் தவறா முயல் என்று.பொதுவாக குறித்த இடத்திற்கு குறித்த நேரத்திற்கு வரும் மனிதர்களை பாராட்ட வேண்டியதில்லை.அதுதான் இயல்பாக இருக்க வேண்டிய பண்பு..ஆனால் இப்போதெல்லாம் பாராட்டும் போதே இவர் குறித்த நேரத்திற்கு வரும் பழக்கம் கொண்டவர் என்றும் கூட சேர்த்து பாரட்டுவதை நேரடியாகவே காண முடிகிறது.. சரி..எப்போது இந்த பழக்கம் தொடங்கியது...ஒரு ஆய்வு செய்து பார்ப்போமா ? . என் எண்ணம் என்ன என்று சொல்லுகிறேன்.எழுத்து வழியாக ஏதோ சொல்ல வேண்டும் என்பதைற்காக இல்லாமல் எல்லோற்கும் எளிமையாக புரியும்வண்ணம் அமைய வேண்டும் என்பதால் இப்படி செல்கிறேன்.ஒருவேளை உங்களுக்கு ஒத்து வந்தால் ஏற்றுகொள்ளுங்கள் அன்றேல் நேரம் தவறா முயலாக உங்கள் அடுத்த வேலையை செய்ய கிளம்பி விடுங்கள்...சரி சிந்திக்க தொடங்கலாமா....உலக மக்கள் எல்லோரும் சரியான நேரத்தில் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்க. அப்போது ஒரு விழாவிற்கு பெரிய மனிதர் ஒருவரை அழைத்திருந்திருப்பார்கள் எதோ உண்மையான காரணம் ஒன்று இருக்க,அவர் தாமதமாக வந்திருப்பார். அந்த தாமதத்திற்காக அவர் மன்னிப்பு கேட்க, விழா குழுவும் அவரது பொறுப்பான பதவியோ, அவர் மீதுள்ள மரியாதையோ எதோ ஒன்றின் அடிப்படையில் பரவாயில்லை என்று சொல்லிவிட்டனர்.இந்த கண்டிப்பின்மை தான் முதல் காரணம் என்று நினைக்கிறேன்.

                   இதை பயன்படுத்திக்கொண்டு அடுத்தஅடுத்தும் தாமதமாக வருவதை வழக்கபடுத்தி கொண்டு வாழ்க்கை வாழ தொடங்கினர்.சில சமயங்களில் அரசியல் பிரமுகரோ, பிரபலமோ வருகிற விழாக்களில் மக்கள் அவர்களை பார்க்கவே பெரிதும் ஆசை கொள்வதுண்டு.இது போன்ற சமயங்களில் தாமதமாக வருவது ஆர்வத்தை தூண்டும் ஒரு யுக்தியும் கூட. இத்தனை பேர் நமக்காக காத்திருக்கிறார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு அலாதியான இன்பம் தருகிறது போலும். ஆக இவற்றை ஆரம்பதிலேயே கண்டித்திருக்க வேண்டும்.கண்டிக்காததும் நம்தவறே.கண்டிப்பின்மையை சாதகமாக பயன்படுத்தி கொண்டதும் நம்தவறே. அதெப்படி ஒரு  மனிதரை விழாவுக்கென்று அழைத்து விட்டு அவர்மீது கண்டிப்புடன் நடந்து கொள்வது என்கிறீர்களா?நான் ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறேன். கவிஞர் கண்ணதாசன் கவிஉலகின் கோபுர உச்சியில் அமர்ந்து கோலோச்சிய காலம் அது..காரைக்குடியில் கம்பன் அடிப்பொடி ஐயா சா. கணேசன் அவர்கள் கம்பன் கழக தலைவராக இருந்தார். அவர் நேரத்தில் மிகவும் கண்டிப்பானவர்.ஒருமுறை கம்பன் விழா கவியரங்கத்தின் தலைமை கண்ணதாசன் என்று முடிவாகி இருந்தது. எந்த கூட்டத்திற்கும் சரியான நேரத்திற்கு சென்ற வரலாறே இல்லாத கண்ணதாசன் அந்த விழாவிற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே  வந்து விட்டாராம்.அதற்கான காரணத்தை அவர் சொன்ன விதம்தான் அழகிலும் அழகு. கவியரங்கம் தொடங்கியதும் 

கடிகாரம் பார்தேத்தான்
காரியங்கள் செய்வதென
பிடிவாதம் கொண்டிருக்கும்
பேரவையின் தலைவர்களே 
கடிகாரம் என் பகைவன்.

கணேசர் பயத்தினிலே
கடுகி இங்கு வந்தேன் .. என்று தன் கவிதையை தொடங்கி கவியரங்கம் நடத்தினார். இப்போது கன்னதாசனோ கணேசன் ஐயாவோ நம் கருபொருட்கள் அல்லர். கண்டிப்பான நேர கடைபிடிப்புதான் நம் கரு. ஆக கண்டிப்புடன் இருப்பது நேரத்தை பொறுத்தமட்டில் மிக நல்ல பலன் பாலிக்கும்.ஆனால் இன்றைக்கு
தாமதமாக வருவது பெரிய மனிதர்களின் பண்பு என்று வேறு தவறான எண்ணத்தை இந்த அரசியல்வாதிகள் எல்லோரும் சேர்ந்து மக்கள் மனதில் ஆழப் பதித்து விட்டனர்.எக்கேடோ கெட்டொழியாட்டும் மாணவ பருவத்தில் சரியாகத்தான் நேரமெல்லாம் கடைபிடித்தோம். இப்போதுதான் இப்படி என்று பழம்பெருமை பேசும் ஆசாமிகளே நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.எல்லாவற்றுக்கும் காரணம் இந்த சமுதாய வழக்கங்களே. வழக்கத்தோடு வழக்கமாய் நாமும் வாழ்க்கையை கலந்து விட்டு காணாமல் போக செய்ய போகிறோமா அல்லது தனித்துவங்கள் நிறைந்த மகத்துவ வாழ்வு வாழ போகிறோமா என்பதுதான் சவால்.சற்று கண்டிப்புடன் நேரத்தை கடைப்பிடித்தால் என்னை போல் ஒரு கிருக்கனின் இதுபோன்ற பிதற்றல்களில் இருந்தாவது தப்பிக்கலாம்...சரி சரி எனக்கு நேரம் ஆகிறது ..ஐயையோ time ஆகிபோச்சே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்