வாழத்தான் வாழ்க்கை #1

வணக்கம்.

பிறப்பது எதற்கு ?
இறப்பதற்கு.
எனில்
இறப்பது எதற்கு ??.....  
      எங்கள் பக்கத்து வீட்டு தாத்தாவிடம் கிண்டலாய் கேட்டுவிட்டு விளையாட ஓடிபோய்விட்ட ஒரு குழந்தையின் கேள்வி இது.  அதுவரையில் தாத்தா முகத்தில் இருந்த அனுபவ கம்பீரம் அப்போது காணாமல் போயிருந்தது. 
      
அடுத்தவீட்டு சங்கதியை ஓட்டுக்கேட்டு அது குறித்து சிந்திப்பதும் கூட அலாதியான சுகம்தான். ..சரி... இந்த கேள்வி... என்னதான் இது. எதற்கு இறக்க வேண்டும். உடல் ஒத்துவராத நிலை எய்தி உயிர் பிரிந்தபோது இறப்பு நேர்கிறது என்கிறோம். அப்படியென்றால் உடல் நன்றாக இருக்கும்போதே இறந்துவிட்டால் இந்த சங்கடம் இல்லைதானே?. ஆனால் அது வாழவேண்டிய வயது என்கிறோம். எனில் வாழ வேண்டிய காலம் என்றுஒன்று இருக்கிறது என்றால் அந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும்.  செய்வது இது என பட்டியலிட முடியுமா?. முடியுமென்றால்,  இதை செய்து கொண்டே இருப்பதுதான் உலகமா?. இதுதான் உண்மையா? இல்லை உண்மையாகவே வாழ்க்கை என்பது வேறா?. என சிக்கலுக்குள் சிக்கல் வந்து  சிக்கி கொள்கிறது.  அதாவது இட்டிலி  வாங்கின இடத்தில் இடியாப்ப சிக்கல் போல.
   கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. எதுதான் வாழ்க்கை என அறுதியிட்டு சொல்லமுடியாத வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அர்த்தமுள்ளதாய் தெரிவது  மனித வாழ்க்கைக்கே உரிய தனி சிறப்பு போலும். இவருக்கு தவறாக  படும் வாழ்க்கைமுறை அவருக்கு சரியாக படலாம்.  தாய்க்கு வலிக்காமல் தாய்ப்பால் குடிப்பது முதல் , தூக்குபவனுக்கு வலிக்காமல் பாடையில் படுக்கிற வரையில் மனித சமுதாயம் வாழ்க்கையில் எதாவதொன்றை கற்றுக்கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் , பெரும்பாலும் தவறுகளே நிகழ்கின்றன. ஆனாலும்  சாதகமான சமாதானங்கள் எல்ல நேரமும் கிடைத்து விடுவதால் நாமும் அதை சரியென்றே எண்ணி பயணிக்க பழகிவிடுகிறோம்.

  உலகம் என்பதோர் நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள். அவரவர் பகுதியை முடிந்தவரை முழுமையாய் முடிக்க படாத பாடுபட்டு நடித்துக் கொண்டிருக்கிறோம். இதில் சிறப்பாக நடிப்பவர் நிறைய பெரும் பேரின் கவனத்தில் படுகிறார். அவரை போல நடிக்க மற்றவர்களும் ஆசைப்படுகிறோம். ஆனால் கண்ணதாசன் சொல்கிறார் மேடையுமில்லை....நாடகமுமில்லை...இல்லாததை எல்லோரும் குழப்பிக் கொள்கிறார்கள். கேட்டால் இதுதான் வாழ்க்கை என்கிறார்கள் என்கிறார்.
   இல்லாத மேடையொன்றில்
            எழுதாத நாடகத்தை
   எல்லோரும் நடிக்கின்றார்
          வாழ்வென்று சிரிக்கின்றார்
                                     -கண்ணதாசன்
           
தொடரும்......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வையத் தலைமை கொள்

புதியன விரும்பு

என்னை கவர்ந்த குறள்