தமிழால் இணைவோம்
18.06.17 அன்று தமிழ் இலக்கிய பூங்கா நடத்திய கவியரங்கத்தில் இடம்பெற்ற தமிழால் இணைவோம் என்ற தலைப்பிலான கவிதை..
தலைமை:பாவலர்#பாக்கம்_தமிழன்
அன்னைத் தமிழே
நின்னை மறக்கிலேன்
நீ இல்லாமல் எப்படிநான்
தனித்திருப்பேன்?
நீ இல்லாது போனால் நான்
தவித்திருப்பேன்?
தேடியேனும் உனைகற்று
களித்திருப்பேன்-அந்த
தேவாமிர் தம்போலே
இனித்திருப்பேன்
உச்சப் புகழுற்று ஊரார்
மெச்சத் தகு அருந்தமிழே -நான்
கச்சதீவு அருகிருந்து
கன்னித்தமிழ் பருகி -மேலோர்
கற்பனையில் கசிந்துவந்த
மிச்சத் தமிழ்ப்பருகி
மீட்டுகிறேன் கவியான்று
கேட்டிடுவீர் செவிகொண்டு....
தமிழால் இணைவோம் தரணியிலே
நாம்
பிரிந்தால் தானே இணைவதற்கு..
பேச்சுக்கு நன்று
பேருண்மை அன்று
அதுசொல்லி இன்று -தமிழால்
இணைந்திடுவோம் வென்று.
பிரிந்தோம் என்பது அறிந்தால்
அறிந்தால் அதுபின் தெரிந்தால்
தெரிந்தால் தெரிந்தது புரிந்தால்
புரிந்தது புலப்பட்டு தெளிந்தால்
முட்டவரும் தடையெல்லாம்
முட்டிமோதி அணையலாம்
மொழிஎன்ற புதுஉணர்வால்
தமிழாலே இணையலாம்
பொதுப்பண்பு எதுவென்று
புரியாமல் போனார் -சிலர்
புரிந்தாலும் எதற்கென்று
வழிமாறிப் போனார்
வாழ்வு தேடிப் போனார்
வழிப் போக்கர் ஆனார்
வந்தவழி மறந்தாரோ
சொந்த நாடு துறந்தாரோ
நம்மவர்கள் ஆங்காங்கே
தஞ்சமாகி போனார்..
நாடுவிட்டு போனாலும்
நாட்டம் விட்டு போகாமல்
பாடுபட்டு தமிழ்வளர்க்கும்
பலரிங்கே உண்டு
உள்ளிருந்து கொண்டே நம்
உயிருக்கு உலைவைக்கும்
பரபாஷா பைத்தியங்களும்
பலபேரும்உண்டு.
பொதுப்பண்பு புரித்தலோடு
புதுவாழ்வு புனைவோம்
எங்கெங்கு வாழ்ந்தாலும்
தமிழாலே இணைவோம்
இன்சுவை கனிதமிழை
இங்கிலீஷ் கார்பேட்டால்
புண்சுவை ஆகிவிட்ட
புதியதலைமுறை நான்.
புண்சுவை ஆக்கி வைத்து
புன்னாக்கி விட்டது நீர்
குமிழ்போல உடையட்டும்- குவலயம்
தமிழாலே இணையட்டும்.
்
இணைந்தபின்னே...
தனித்தமிழ் பேசுதற்கு
தடை இனி ஏது நீ
பொற்சலங்கை தமிழெடுத்து
சொற்சிலம்பம் ஆடு.
700 கோடி களாம்
8 கோடி தமிழ்நிலமாம்
இனியென்ன தமிழாலே
இணைந்திடல் சாத்தியமே..
மனத்தாலோ குணத்தாலோ
விதியா லோ சதியாலோ
அதுவாலோ இதுவாலோ
ஆகமொத்தம் எதுவாலோ
பிரிந்துள்ள எல்லோரும்
தமிழாலே இணையட்டும்
இணைந்துள்ள நமைப்பர்த்து
எல்லோரும் இணையட்டும்
தண்ணீர் தொடங்கி
தமிழீழம் வரையாக
தமிழாலே இணைந்திட்டால்
தகராறு ஏது...???
தகராறு தொலைந்து
தமிழ்நாடு வளர
தண்டமிழ் சிறப்பறிந்து
தமிழாலே இணைவோம்
என்றும் அன்புடன்
உங்கள்
பாம்பன்.மு.பிரசாந்த்
Arumai..arumai.
பதிலளிநீக்குநன்றி #கிருஷ்ணா_புதியராஜ்
பதிலளிநீக்கு